மனிதமும் மதம் பிடித்த ஓலமும்......

“உறங்குவது போலும் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு”
இறப்பு தூக்கம் வருதலை போன்றதாகவும் பிறப்பு உறக்கம் நீங்கி விழிப்பதைப் போன்றதாகவும் என்ற உண்மை உணரப் பட்டாலும் அந்திமக்காலத்தை நோக்கி போகும் உயிருக்கு விடை கொடுக்கும் பக்குவம் இன்னும் முழுமையாக இல்லை நமக்கு.
என்ன தான் இறப்பும் பிறப்பும் பிணைந்திருந்தாலும் பிறப்பை யாசிக்கும் அளவிற்கு இறப்பை யாசிக்க நான் இன்னும் பழக்கப்படவில்லை..பழகிக்கொள்ளவும் இல்லை. ஒரு முடிவாகிப் போகும் மரணம் மீண்டும் நினைவலைகளில் மட்டுமே உயிர்பித்து சில நொடிகளில் மீண்டும் நிழலாகிப் போகும் சாத்தியமே உண்டு. அதனால் தான் மறதியை இறைவன் வைத்தான் போலும் ஒவ்வொரு மனிதத்திலும்..
ஆனால் முடிவாகி போன மரணம் ஒரு பிரளயத்தை உற்பத்தி செய்து தினம் தினம் செத்து பிழைக்கும் ஏற்பாடு செய்து கலாச்சார வேலியைத் தாண்ட இயலாது முடமாக்கிப் போட்டு, இருத்தலையும் மறதியையும் அழித்து விட்டுப் போன கதைத் தெரியுமா உங்களுக்கு...?..இதோ அந்த மனிதனின் ஓலம்.....
அன்று இருண்ட காலம் போலும்
ஏதோ ஒரு வலி உணர்வு வழியே
செய்தி வந்தது மரணம்
ஆம்..தாயுமானவனின் மரணம்...
19 வருட பிரிவிற்கு
ஒட்டாத உறவு
மரணத்தில் ஒட்டிக் கொண்டது
பசைப்போல
அதுவும் கிழித்து எறியப்பட்டது
மதம் பிடித்த மனிதனின்
ஓலத்தில்...
மதம் என்ற கலாச்சார கோரத்தில்
பால்யத்தில் பிரிந்து போன
உயிர் கொடுத்தஉறவு
மதப் பிடியிலேயே...
தாயும் தந்தையும் வெவ்வேறு துருவத்தில்
பெயர் ஒரு கலாச்சார போர்வையில்
உள்ளம் இன்னொரு கலாச்சார
வேலியில் வளர்க்கப்பட்ட நான்
உருவாக்கம் இல்லாமலே
உறைந்திருக்கலாம்...
வளர்ந்து வந்த துணிவு
இன்னும் மறக்கலாகாது
பாரதி கவிதைப் போல்
ஆணி அடித்தது அடி மனதில்...
கேள்விகள் பல செவி வழி சேவகமென
செவிப்பறையைக் கிழித்தது
வற்புறுத்தல் இல்லை என்று
வறுத்தி எடுத்த ஓலங்கள்
இன்னும் காதில் கேட்டுக் கொண்டே...
அன்னை அடையாளம் காட்டியது
தாயுமானவனை மட்டுமல்ல
'கடவுளையும்' தான்...
முடிவோடு பயணப்பட்டாலும்
சுதந்திரப் போர்வையைப்
போர்த்திக் கொள்ள முடியவில்லை
உடல் நடுங்கினாலும்...
போராட்டம் தொடங்கினேன்
நடந்து நடந்து
பாதம் நோகினாலும்
சுதந்திர வாசலை இன்னும்
எட்டவில்லை...
எத்தனை அதிகார பூர்வ கடிதங்கள்
எத்தனை சட்டத்திட்டங்கள்
வழக்காட வழக்குப் போட்டு
வழக்காடு மன்றம் தள்ளிப் போட்டது
வழக்குகளை மட்டுமல்ல
என் உள்ள சுதந்திரத்தையும்தான்...
கரைந்தது மனம் மட்டும் அல்ல
சேர்த்த பணமும் வாழும் வயதும்...
முதிர்க்கன்னியாகும் சாத்தியத்தில்
நாளை என் பெயரையும்
பதிவு செய்து கொள்ளலாம்
தப்பில்லை...
கையில் விலங்கு இல்லாமலே
சிறைப்பட்ட வாழ்வு
மனதை செல்லறித்துக் கொண்டே...
கொஞ்ச கொஞ்சமாய்
இறப்பில் மறையும் தருவாயில் தான்
என் தாயுமானவனின் மரணம்...
அன்பின் அத்தனை அணுக்களையும்
சேர்ப்பித்தவனின் சாக்காடு...
உயிரூட்டிய நினைவு சுமந்து
முகம் பார்த்து
மார்த்தட்டி நாங்கள் ஓலமிட
மதம் பிடித்த மனிதர்கள்
அழாமலே ஓலமிட்டனர்...
அடக்கம் செய்வதற்கு முன்பாகவே
என் தாயுமானவனின் சடலம்
கைப்பற்றப்பட்டது...
மனித நேயம் மிதிக்கப்பட்டது
மதம் பிடித்த வேகத்தில்..
பரிணாமங்களும்
பரிபூரணங்களும்
மனிதர்களை வளர்க்கவில்லை...
மதம் பிடித்த யானைகளை விட
மதம் பிடித்த மனிதர்கள்தான்
மனிதர்களைக் கொல்லும்
எதார்த்தத்தில்..
இன்னும் வலிகள் ஆறவில்லை
மரண வாடையும் அகலவில்லை...
சலம் பிடித்த ரணத்தோடு
அரவம் இல்லாமல்
மரணத்தைக் கையில் ஏந்தி
நடந்து கொண்டேதான் இருக்கிறேன்
மதம் பிடித்த விடுதலைக்காக...
என் ‘மரணம்’ முடிவல்ல...
இன்னொரு பிரளயத்தின் ஆரம்பம்...
- தினேசுவரி